Tuesday, December 30, 2008

kavimani kavithai

அன்புள்ள காதலிக்கு
உண்மையை மட்டுமல்ல
உணர்வுகளையும் சொல்ல
ஒரு கடிதம்

குணம் மாறாமல் இருக்க
ம்ண்ணோடு சேர்த்து பிடுங்கி
நடப்படும் செடிபோல
எங்கெங்கோ இருந்து எடுத்து
நாம் நடப்பட்டோம்
அன்று சோலையில்

கொட்டிவைத்த மணலில்
நட்டுவைத்த செடியில்
துளிர்விட்ட மலர்மொட்டுபோல்
நம் நெருக்கம் தொடங்கியது
சின்னப் புன்னகையால்

பிரிவென்றும்
முறிவென்றும் தெரியாது
புன்னகையும் எண்ணங்களும்
ஒன்று சேர்ந்து வார்த்தைகளின்
உதவியால் வளரத்தொடங்கியது
நாற்பத்தெட்டு மாதங்களிடையே
நம் வசந்த உறவு

ஆஹா!
அத்தனை அழகான உறவு-இன்று
கண்மூடும் பொழுதெல்லாம்
கனவிலும் நினைவிலும்
கண் நீரின் துணையோடு
நான் காணும் காட்சிகளாக
மட்டும்

எவர்கண் பட்டதென்று
தெரியவில்லை
இருவேறு துருவங்களாய்
இன்று எங்கெங்கோ
வாழ்கிறோம்

அக்கரையில்
நீ வாழ்கிறாயென்றால்
அக்கறையோடு அலைதாண்டியும்
வந்திடுவேன்
எக்கரை என்றே தெரியாதபோது
இக்கரையில் நிற்கிறேன்
நிற்கதியாய் நான்

முட்களுக்கு மத்தியில்
வளரும் ரோஜாபோல்
உன் நினைவுகளுக்கு
மத்தியில் இன்று நான்

தன்னை உருக்கி வெளிச்சம்
கொடுக்கும் மெழுகுபோல்
என்னை உருக்கி வாழ்கிறது
உன் நினைவுகள்

பெண்ணே!
உண்மையில் துடிக்கும் இதயம்
ஒவ்வொருவருக்கும் இரண்டு
ஒன்று துடிக்கையில் மற்றொன்று
ஓய்வில்…
எனக்கோ இரண்டும் ஓய்வில்
உன் நினைவுகளில் வாழ்வதனால்

நித்தமும் என்னைக் கொன்று
நிஜங்களைத் தின்று
நிழலிலும் நினைவிலும்
கடக்கின்றது
என்……..காலம்

கனவுகளும் கற்பனையும்
இல்லையென்றால் என்றோ
காலாவதியாயிருக்கும்
என் வாழ்வு

இது முகவரியில்லா கடிதம்
மட்டுமல்ல
வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வும்

முதல்வரிக்கு நீ
கொடுக்கும் தொடக்கமே முடிவு
இந்த கவிதைக்கும் வாழ்வுக்கும்
என் காதலியே!

No comments:

Post a Comment